Nagi-Narayanan -Thodi Raagam அதிகாலை.காம் நேயர்களுக்கு நாகி நாராயணனின் அன்பான வணக்கங்கள். இந்த நிகழ்ச்சியைக் கேட்டு விட்டு நீங்கள் அனுப்பும் கருத்துக்களும், அளிக்கும் ஆதரவும் எனக்கு மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. இதே போல் அவ்வப்போது உங்கள் கருத்துக்களை எனக்கு தெரியப்படுத்துங்கள். இந்த நிகழ்ச்சியை மேலும் மெறுகேற்ற அது எனக்கு உதவும். இன்று நாம் பார்க்க இருக்கும் ராகம் தோடி. இது ஒரு மேளகர்த்தா ராகம். 72 மேளகர்த்தா ராக வரிசையில் இது எட்டாவது ராகமாகும். இரண்டாவது சக்ரமான "நேத்ர" சக்ரத்தில் இது இரண்டாவது ராகம். கடபயாதி ஸங்க்யை முறைப்படி இதை "ஹனுமதோடி" என்று அழைப்பார்கள். இதன் ஆரோஹண அவரோஹணத்தை இப்போது கூறுகிறேன். ஸ, ரி1, க2, ம1, ப, த1, நி2, ஸ் ஸ், நி2, த1, ப, ம1, க2, ரி1, ஸ அதாவது, இதன் ஸ்வரங்கள், ஸ (ஷட்ஜம்), சுத்த ரிஷபம், சாதாரண காந்தாரம், சுத்த மத்யமம், ப(பஞ்சமம்), சுத்த தைவதம், கைசிகி நிஷாதம் மற்றும் மேல் ஷட்ஜம். இது கர்நாடக இசையில் ஒரு முக்கியமான ராகமாகும். இதற்குப் பல ஜன்ய ராகங்களை உற்பத்தி செய்த பெருமை உண்டு. இந்த ராகத்தைப் பாடும்போது ஜண்டை ஸ்வரங்களாக 'கக மம தத, மம தத நிநி, தத நிநி ஸ்ஸ்' என்ற ப்ரயோகங்களை உபயோகப்படுத்தி, பாடலுக்கு அழகு சேர்ப்பார்கள். இன்னும் முக்கியமாக தாடுஸ்வர ப்ரயோகங்களாக, 'நிகரிநித நிரிநிதம கமநிதம காரிஸா' போன்ற ப்ரயோகங்கள் கச்சேரியை களை கட்டச் செய்து விடும். பஞ்சமத்தை உபயோகிக்காமல், 'தநிஸதா, ரிஸதா' என்று சிலர் சில இடங்களில் பாடுவார்கள் - இவை 'பஞ்சம வர்ஜப்ரயோகங்கள்' என்று அழைக்கப்படுபவை - கேட்பதற்கே ரம்யமாக இருக்கும். உதாரணத்திற்கு, பட்டணம் சுப்ரமண்ய அய்யருடைய "ஏராநாபை" என்று ஆரம்பிக்கும் தோடி வர்ணத்தில், சரணத்தில், 'தநிதகரிரி மகரிஸ நிகரிஸநித நிகரி நிரிநிதநி தகரிநிதமதநி (ஏராநாபை..) என்று வரும். இந்த ஸ்வரங்களில் பார்த்தீர்களானால், பஞ்சமமே வராது. அதில் ஒரு தனி அழகு இருக்கிறது. ஹிந்துஸ்தானி இசையில் இதற்கு இணையானது பைரவி தாட். அவர்கள் இதை ஒரு காலையில் பாடும் ராகமாகக் கருதுகிறார்கள். ஹிந்துஸ்தானி இசையின் தோடி ராகமும் நமது தோடி ராகமும் வெவ்வேறு. அவர்களது தோடி நமது சுபபந்துவராளியைப்போல் இருக்கும். இந்தத் தோடி ராகத்தின் சரித்திரம் என்று பார்த்தால், பழங்காலத்திலிருந்து இந்த ராகத்தைப்பற்றி முக்கியமான பல புத்தகங்களில் எழுதப்பட்டு உள்ளது. 11ம் நூற்றாண்டின் பாரஸ்வதேவா அவர்கள் எழுதிய "ஸங்கீத சமய ஸாரா", 13ம் நூற்றாண்டின் "ஸங்கீத ரத்னாகரம்", 14ம் நூற்றாண்டின் லோசன கவி அவர்கள் எழுதிய "ராக தரங்கிணி", 1609 இல் ஸோமநாதரால் எழுதப்பட்ட "ராகவிபோதா", 1735 இல் துளஜா மஹாராஜாவால் எழுதப்பட்ட "ஸங்கீத ஸாராம்ருதா", 18-19ம் நூற்றாண்டில் கோவிந்தாச்சார்யா அவர்களால் எழுதப்பட்ட "ஸங்க்ரஹ சூடாமணி" போன்ற புத்தகங்களில் தோடி ராகத்தைப் பற்றி எழுதி இருக்கிறார்கள். 19ம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில், ஸரபோஜி மஹாராஜாவின் சபையில் தோடி ஸீதாராமைய்யா என்ற ஒரு புகழ் பெற்ற பாடகர் இருந்தார். அவர் இந்த ராகத்தை எட்டு நாட்களுக்கு நிறுத்தாமல் பாடினாராம். இது ஒரு முறியடிக்கப்படாத சாதனையாகும். இதனாலேயே அவருக்கு "தோடி ஸீதாராமைய்யா" என்ற பெயர் வந்தது. ராக ஆலாபனை செய்வதில் படிப்படியாக முன்னேறிச் செல்வதற்கு சில முறைகள் உண்டு. அதன்படி அவர், அக்ஷிப்தா, ராகவர்தனி, ஸ்தாயி, மற்றும் மகரிணி என்ற வழிமுறைகளில் பாடி அதன் பிறகு முறையாக ஒரு அமர்க்களமான பல்லவி பாடி நிறைவு செய்தாராம். கேட்பதற்கே மலைக்கிறது. இவர் சில சமயங்களில் தனக்கு பணத்தேவை ஏற்படும் நேரங்களில் கடனாகப் பணத்தைப் பெற்றுக்கொண்டு, தான் பணத்தை முழுமையாகத் திரும்பக் கொடுக்கும் வரை இந்த ராகத்தைப் பாடுவதில்லை என்று சத்தியம் செய்து விட்டு,தன்னுடைய சொத்தான இந்தத் தோடி ராகத்தை அடகு வைப்பாராம் !!! திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை அவர்கள் நாதஸ்வரச் சக்கரவர்த்தி என்றே பெயர் பெற்றவர். அவர் தோடி ராகம் வாசிப்பதில் மன்னன். தஞ்சாவூர், திருவிடைமருதூர், திருவாவடுதுறை, மற்றும் திருப்பனந்தாள் போன்ற கோவில்களின் விழாக்களில் அவர் வாசித்த தோடி அதி அற்புதமானது. செவிகளுக்கு ஒரு பெரிய விருந்து. இந்தத் தோடி ராகத்தை அவர் மணிக்கணக்கில் விரிவாக வாசிப்பார். சில நேரங்களில் இரவு முழுவதும் கணக்கில்லாத கற்பனைகளுடன் வாசித்துக் கொண்டே இருப்பார். ரசிகர்களும் மெய்மறந்து கேட்டுக்கொண்டே இருப்பார்கள். தோடி ராகம் இவருடைய வீட்டுச் சொத்து என்றே மக்கள் கருதினார்கள். ஒருமுறை திருமதி. எம்.எல்.வஸந்தகுமாரி அவர்கள் திரு.ராஜரத்தினம் பிள்